மனதோடுதான் நான் பேசுவேன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனதோடுதான் நான் பேசுவேன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 8 ஏப்ரல், 2011

மனதோடுதான் நான் பேசுவேன்...- பகுதி - 2

இன்றைய இளைய சமுதாயம்.

அன்பு நண்பர்களே !
                                     இன்றைய நவீன உலகில் இளைய சமுதாயம் முன்னேறியுள்ளதா ? அல்லது சீரழிந்துவிட்டதா ? என்று கேட்டால் நாம் இரண்டுவிதமான பதிலைக் கூற வேண்டியதிருக்கும். அறிவுசார் துறைகள்,விஞ்ஞானம் போன்றவைகளில் கண்டிப்பாக இளைஞர்களின் பங்கு அபரிதமான நிலையில் உள்ளது. ஆனால் நம் நாட்டின் கலாச்சாரம் சார்ந்த விஷயங்களில் மிகவும் சீரழிந்துவிட்டது என்பது கசப்பான உண்மையே ! நானும் ஒரு இளைஞன் என்ற முறையில் காலத்தைச் சற்று பின்னோக்கிப் பார்த்தால் 2000  வது ஆண்டிலிருந்தே இந்த புரட்சி ராக்கெட் வேகத்தில் பயணித்தது எனலாம். பொறியியல் படித்துவிட்டு அரசாங்கவேலைக்கு மனுப்போட்ட காலம் போய் அமெரிக்காவிற்க்கு விசா வாங்கும் காலம் மாறியது.அதுவும் இந்த கணிப்பொறி காலம் வந்தபிறகு வெள்ளைக்காரன் கொடுக்கும் அரைச் சம்பளத்திர்க்கு மாவரைக்கும் கால் சென்டர் வேலையும், மென்பொருள் துறையும் இங்கேயே நமது நாட்டிலேயே பரவத் தொடங்கின. இவர்கள் வந்தது யாருக்கு லாபம் என்றால், பெருநகரங்களில் வாடகைக்கு வீடு கொடுப்பவர்களுக்கும், அங்கு சில்லறை வியாபாரம் செய்பவர்களுக்கும் மட்டும்தான் ஏனென்றால் வெளிநாட்டின் அரைச் சம்பளம் நமக்கு பொக்கிஷம் போல இருக்கிறது.இதை செய்த புண்ணியவான்கள் இன்னொன்றையும் செய்தார்கள் அதுதான் கலாச்சார சீரழிவு. அதற்க்கு இவர்கள் மட்டுமே காரணம் என்று நான் சொல்லவில்லை. இவர்களும் முக்கிய காரணம் என்று சொல்கிறேன்.
                                    வாழ்க்கைக்கு தேவையான ஊதியத்தை விட பலமடங்கு கிடைத்ததாலும் பணி செய்யும் சூழ்நிலை மாற்றத்தாலும் யாரும் அறியாமலேயே இவர்களுக்குள் கலாச்சார மாற்ற புற்றுநோய் அதீதமாக பரவத் தொடங்கியது. இந்த மாற்றம் ஒருவகையில் உலகளாவிய மனித சமுதாயம் என்னும் உயர்ந்த பண்பை தோற்றுவித்தாலும், இந்தியக் கலாச்சாரம் என்னும் முறை அழிய காரணமாகவும் உள்ளது.  
                                      பணிபுரியும் சூழல் மிகுந்த மனச்சோர்வை ஏற்ப்படுத்துவதாலும் மிதமிஞ்சிய பணப்புழக்கத்தாலும் இவர்கள் மனச்சோர்வை நீக்கி புத்துணர்வை ஏற்ப்படுத்தும் வழியை நாடவேண்டியுள்ளது. அதன் விளைவுதான் பெருநகரங்களில் இருக்கும் பப், டேட்டிங்,டிஸ்கோதே போன்ற மகோன்னதமான விளைவுகள். நான் ஏன் மகோன்னதம் என்று சொல்கிறேன் என்றால் இவை அனைத்தும் மேலைநாடுகளில் இருந்து இறக்குமதியான பழக்கங்கள்.அவர்கள் இந்த மாதிரியான பழக்கங்கள் ஏன் கொண்டுள்ளார்கள் என்றால் சீதோஷ்ண நிலை சார்ந்த இயற்க்கை சமன்பாடுகளை நிலைப்படுத்தத்தான். அது எப்படி என்று பார்க்கப் போனால் நான் உங்களுக்கு ஒரு மானுடவியல் வகுப்பு எடுக்கவேண்டியதிருக்கும், அதை பின்னர் பார்க்கலாம்.  
                                   இப்போது நான் ஒன்று சொல்கிறேன், தங்களை புத்திசாலிகள் என்று எண்ணிக்கொள்வது இவர்களின் தலையாய கடைமைகளில் ஒன்று. சரி நீங்கள் சிட்டியில் வளர்ந்துவிட்டீர்கள்,மிக சாளரமாக ஆங்கிலம் பேசுகிறீர்கள்,கம்ப்யூட்டர் போன்ற சில உபகரணங்களை இயக்கத் தெரிந்து வைத்திருக்கின்றீர்கள். நான் தெரியாமல்தான் கேட்கிறேன் இதனாலெல்லாம் நீங்கள் புத்திசாலி ஆகிவிட்டதாக அர்த்தமா ?
                                      உங்களைப்போன்ற ஒரு நகரத்து இளைஞன் தனது கிராமத்து ஆசிரியருடன் பிரயாணம் மேற்கொண்டான்.இந்த இளைஞன் தனது உலக ஞானத்தை தம்பட்டம் அடித்துக்கொள்ள விரும்பினான். அதற்காக பார்க்கும் விஷயத்தை எல்லாம் பயங்கரமாக விளக்கிக்கொண்டிருந்தான். இரவு வேளை வந்தது கூடாரம் அமைத்துக் கொண்டு இருவரும் உறங்கிக்கொண்டிருந்தார்கள் நடுஇரவில் திடீரென்று இளைங்கனுக்கு விழிப்பு வந்தது, ஆசிரியரை எழுப்பினான்.
                                      " ஐயா மேலே பாருங்கள் என்ன தெரிகிறது ?"
                                      " நட்சத்திரங்கள் " என்றார் ஆசிரியர்.தூக்கம் கலைக்கப்பட்ட எரிச்சலுடன்.
                                      " ஐயா அப்படி அலட்சியமாக சொல்லாதீர்கள். ஒவ்வொரு நட்சத்திரமும் எங்கே தென்படுகின்றன என்று தெரிந்து நான் இரவில்கூட திசைகளை அறிந்துகொள்ளலாம்." என்று இளைஞன் தனக்கு தெரிந்த நட்சத்திர விசயங்களை எல்லாம் பெருமையாக விளக்கிக் கொண்டிருந்தான்.
                                        ஆசிரியர் அவனை நிறுத்தினார்.
                                         " உனக்கு வேறு என்னென்னவோ தெரிகிறது.எனக்குப் புரிவது ஒன்றே ஒன்றுதான்.வானமே தெரிகிறது என்றால்,நம் கூடாரத்தை யாரோ திருடிவிட்டார்கள் என்றுதானே அர்த்தம்."
                                         அவர்களைப்போன்றவர்கள் பள்ளியில் கற்றதை வைத்து புத்திசாலியாக இருக்கிறார்கள். மற்ற சிலர் வாழ்க்கையில் கற்றதை வைத்து புத்திசாலியாக இருக்கிறார்கள்.


                                                                                     ( இன்னும் பேசுவேன்.....)
 

 
 
 
                                      
                                 

சனி, 29 ஜனவரி, 2011

மனதோடுதான் நான் பேசுவேன்... - பகுதி 1

அன்பு நண்பர்களே !
                                இந்த நாள் வரை எனக்கு தெரிந்ததை, பார்த்ததை, பழகியதை, கேட்டதை, படித்ததை, அறிந்ததை, புரிந்ததை, உணர்ந்ததை உங்களுடன் இந்த இணைய உலகில் பகிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். அதன் வெளிப்பாடுதான் இந்த மனதோடுதான் நான் பேசுவேன் இடுகை. மனிதர்கள் பலவிதம் மாற்றம் நிறைந்த இந்த பிரபஞ்சத்தில் மனித மனங்களைப் பற்றியும் அதன் பண்பாட்டு உட்கூறுகளைப் பற்றியும் விவரிப்பதுதான் இந்த கட்டுரையின் நோக்கம். காத்திருங்கள் எதிர்வரும் நாட்களில் உங்கள் மனதோடும் நான் பேசுவேன்......
                                 எந்த ஒரு நிகழ்வானாலும் அது இறைவணக்கத்தைக் கொண்டிருக்கும்.அதுபோல நானும் ஆரம்பிக்கிறேன். ஆன்மீகத்தையும் இயற்கையையும் இணைந்து பார்ப்பது நம் பண்பாட்டில் ஊறிவிட்டது அதுவே நிதர்சனமான உண்மையும் கூட இருந்தபோதிலும் சிலர் சொல்கிறார்கள் கடவுள் இல்லை என்பவர்களுக்கு போதிக்கவே இயற்கை சீற்றங்கள் வருகிறது இப்போதைய சூழ்நிலையில் நாஸ்திக வாதங்கள் தலை தூக்கி வருகிறது அதனால்தான் உயிர் பலிகள் அதிகரித்துவிட்டது என்கிறார்கள்.சரி பொதுவாக நம் பழக்கம்தான் என்ன? நமக்கு பாதிப்பு வந்தால் கடவுளிடம் அழுது புலம்புவது, இனிமேலாவது என்னை  காப்பாத்து என்று வேண்டிவிட்டு பழையபடி
அதே முட்டாள்தனத்தை தொடர்வது. ஒரு ரூபாயை உண்டியலில் போட்டுவிட்டு குடும்பத்திற்கே மொட்டை போட்டுவிட்டால் கடவுள் உன்னை காப்பாத்த வேண்டும் என்று என்ன சட்டமா?
                                   கடவுள் உண்டியலில் காசு போட்டுவிட்டான் என்பதற்காக காப்பாற்றவும் மாட்டார், போடாதவர்களை தண்டிக்கவும் மாட்டார்.
                                   நாம் என்ன செய்கிறோம்? " எல்லாம் மேல ஒருத்தன் இருக்கானே அவன் பார்த்துக்குவான் " அப்டின்னு யாரோ சொன்னத நம்பி நம்மள நாமே ஏமாத்திக்கறோம், கடவுளுக்கு அத பண்ணலாமா இத பண்ணலாமா? எத பண்ணினா கடவுள் சந்தோஷப்பாடுவாரு அப்டின்னு யோசிக்கறோம்.
                                   கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் நம்மை இவ்வளவு சிறப்பாக படைத்திருக்கும் வேலையை செய்திருக்கிறாரே அது ஈடு செய்ய முடியாத சாதனை அல்லவா? அதை பயன்படுத்திக் கொண்டு நமக்குத் தேவையானவற்றை நாம்தானே தேடிக்கொள்ள வேண்டும். யாராவது எதையாவது சொல்லிவிட்டால் அவற்றை   கண்ணை   மூடிக்கொண்டு முட்டாள்தனமாக யோசிக்காமல் பின்பற்றுவது நம் பழக்கமாக இருக்கிறது.
                                    ஒரு கதை ஒரு ஆபீசில மூணு பேரு தினமும் ஒன்னாதான் மதியம் லஞ்ச் சாப்டுவாங்க. அதுல ஒருத்தர் சொன்னாரு " பத்து வருஷமா மதியம் டப்பா திறந்தா இதே புளியோதரைதான் நாளைக்கும் இதே புளியோதரை இருந்தா நான் என் தலையை உடைச்சுக்குவேன் " அப்டின்னார்.
                                    அடுத்தவர் சொன்னாரு " அதே கதைதான் இங்கயும் பத்து வருஷமா மதியம் டப்பா திறந்தா இதே தயிர்சாதம்தான் நாளைக்கும் இதே  தயிர்சாதம் இருந்தா நானும் என் தலையை உடைச்சுக்குவேன். "
                                    அடுத்து நம்ம ஆளு சொல்றாரு " எனக்கும் அப்டித்தாங்க, பனிரெண்டு வருஷமா மதியம் டப்பா திறந்தா இதே இட்லிதான் நாளைக்கும் இதே  இட்லி  இருந்தா நானும் உங்களோட சேர்ந்து என் தலையை உடைச்சுக்குவேன் " அப்டின்னு சொல்றாரு,
                                    அடுத்த நாளு பார்த்தா மூணு நண்பர்களின் டப்பாக்களிலும் உணவு மாறவில்லை வழக்கம்போல அதே புளியோதரை தயிர் சாதம் இட்லி தான். பாத்தாங்க மூணு பேரும் நல்ல பாறாங்கல்லா பாத்து தலையில முட்டி மண்டைய உடைச்சுக்கிட்டு மருத்துவமனையில போய் படுத்துகிட்டாங்க, மூணு பேரோட  மனைவியும் வந்தாங்க, ஒருத்தி " என் வீட்டுகாரரு இந்த அளவுக்கு  புளியோதரையை வெருத்திருப்பாருன்னு தெருஞ்சா நா வேற கொடுத்திருப்பனே ! " அப்டின்னு அழுதா, அடுத்தவள் " நானும் அது தெருஞ்சா இந்த தயிர் சாதத்த விட்டுட்டு வேற செய்து தந்திருப்பனே" அப்டின்னு சொன்னா
                                     அடுத்து நம்ம ஆளு மனைவி " இதுல தப்பு எங்க நடந்திருக்குன்னு தெரியல, கல்யாணமான நாளிலிருந்து தினமும் அவருக்கு தேவையானதை அவரே தான சமைச்சு எடுத்துட்டு வந்தாரு "
                                       நம்ம ஆளைப்போலதான் நாமும் நாம் விரித்தவலையில் நாமே மாட்டிக்கொள்கிறோம். ஆக நம் வாழ்க்கையை மாற்றிக்கொள்வது நம் கையில்தான் உள்ளது.அது ஆன்மீகமாகட்டும் வேறு எந்த துறையாகட்டும் நமக்கு நாம்தான் நண்பனும் எதிரியும் என்பதை நினைவில் கொண்டு சரியான புரிதலுடன் வாழ்க்கையில் பயணிப்போம்.

டிஸ்கி :
                 பத்திரிகை உலக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், பதிவுலகில் பதிவரின் அனுமதி இல்லாமல் அவரின் படைப்பை திருடுவது என்பது பெற்ற தாயிடம் இருந்து குழந்தையை திருடும் செயலுக்கு ஒப்பானது. நாங்கள் எழுதும் ஒவ்வொரு பதிவும் உங்களுக்கு எப்படியோ தெரியாது, நாங்கள் எங்கள் குழந்தையைப் போல்தான் பாவிக்கின்றோம். ஆக அனுமதி இல்லாமல் எதையும் பிரசுரிக்க வேண்டாம் என்றும் வேண்டிக்கேட்டுக் கொள்கிறேன்.

( இன்னும் பேசுவேன்........  )